Showing posts with label sabeer. Show all posts
Showing posts with label sabeer. Show all posts

Saturday, March 12, 2011

தொடர்தல்.....கவிதை ......சபீர்

தேன்துளி Then Thuli 2:10 AM


தொடர்தல்.




 

அடர் கேசத்தை
அக்காலப் பெண்டிர்
நேர்த்தியாய் பிரித்தெடுத்து
நெற்றி துவங்கி

நேர் வகிடு எடுத்ததுபோல
கருவேலங்காட்டினூடே
கிழக்கேபோகுமொரு
ஒற்றையடிப் பாதை                                                                       

அவ்வழிச் செல்லும்
அருக்கானியொருத்தி
அவள்தன் முன்சென்ற
அத்தானின் காலடிகளை
அழகாய்த் தொடர்ந்தது..
.பத்தாம்பசலியாம்!

வலக்கை கொண்டு
இடை தழுவியவனை
இடக்கையால் படர்ந்து
இவனோடு அவளும்
அவளோடு இவனும்
தலைசாய்த்து
நாலுபேர் புழங்கும்
நடுத்தெருவில்
நடப்பது
நாகரிகமாம்!
                                                                                                               
குளியலின் கவனக்குறைவால்
காதுக்குள் சிக்கிய
தண்ணீராய்
தாம் தூமென
சப்தமிடும்
முற்போக்கரே...

தொடுதலைவிட
தொடர்தலே
வாழ்க்கையின்
வெற்றிக் கணக்கு!


Sabeer abuShahruk
,sabeer.abushahruk@gmail.comc




LABEL:-

Friday, February 18, 2011

மடிந்துபோன மனித நேயம்:: கவிதை

தேன்துளி Then Thuli 8:39 PM

மடிந்துபோன மனித நேயம்:




மனித நேயம் மடிஞ்சி போச்சு
பகல் வேஷம் மலிஞ்சி போச்சு
சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே
சுருங்கிப் போச்சு மனித நேயம்!   

          
காயம்பட்ட காகம் கண்டு
கரையும் காக்கைக் கூட்டம்
காயம் கண்டு கரையும் அந்த
நேயம் எங்கே மனிதா?

ஒட்டுமொத்த கூட்டமும்
கட்டுக்கோப்பா வழ்ந்தோம்
காயம் பட்டு மனதிலே -மனித
நேயம் விட்டுப் போச்சு!

நாகரிகப் போர்வைக்குள்ளே
தனிமைப்பட்டான் மனிதன்
நாயைவிட கேவலமாய்
நன்றி கொன்றான் மனிதன்!


காசுபணம் கணக்குப் போட்டு
பாசம் நேசம் விற்றான்
அக்கம்பக்க வீட்டாரோடு
பரிச்சயத்தை வெறுத்தான்


மனித நேய மகாசக்தி
மடிந்து போன காரனம்
எல்லைச் சண்டை நாட்டிலே
கொல்லைச் சண்டை வீட்டிலே!       

                   
ரெண்டடி நிலத்திற்காக
தடியடி வரைப் போகிறாய்
ஆறடியில் அடங்கும்போது
காலடி கூடக் கிடைக்காது!


நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!


Sabeer abuShahruk,
-

Saturday, December 18, 2010

உன்னப்பனின் விண்ணப்பம் - சபீர் அஹமது

தேன்துளி Then Thuli 12:18 AM

அது என்னவோ தெரியவில்லை...

//10 மாதம் சுமப்பது தாய்... 20 வருடம் சுமப்பது தந்தை... அது என்னவோ தெரியவில்லை... அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்... நீயாவது எழுதினாயே... சந்தோசம்// -zakir hussain... என தூண்டிய என் ஜாகிருக்கு நன்றியோடு....


உன்னப்பனின் விண்ணப்பம்

வா
போவோம்
வழி நெடுக பேசிக்கொண்டே...
நீ பிறக்க-
நீண்ட
நெடுநாள் காத்திருந்தோம்,
நீயோ..
காத்திருப்புகளுக்கான
மொத்த அர்த்தம்,
மொத்த கனவுகளின்
ஒற்றைப் பலன்!

யாமும் ஏனையோரும்
நின்னைப் பார்த்திருக்க-
நீயோ...
உன்றன் முதல் விழிப்பில்- உன்
அன்னை பார்த்தாய்-பின்
என்னைப் பார்த்தாய்
புன்னகையோடு உறங்கிப்போனாய்.

பிஞ்சுப் பாதங்கள்
நெஞ்சு உதைக்க
ரெட்டை ஸ்டெத்தெஸ்கோப்
தொட்ட கனத்தில்...
சீரானது என்
சுவாசம்!

ஒற்றை நிழலோடு
ஊரில்
உலா வந்த எனக்கு...
குட்டி நிஜமாய்
நீ
கூட வந்தாய்!

கக்கத்திலும் காலரிலும்
கைப்பட்டியிலும்
அத்தர் மணக்க...
என் -
இடது கை விரல் பிடித்து
நீயும்
வலது கை தாங்கி
உன் தாத்தாவும் என -
பெருநாள் தொழுகைக்கு
பள்ளி சென்ற தினம்
நினைவிருக்கா உனக்கு...?

நீ
கார் பொம்மை கேட்டாய்-
நானுனக்கு
கார்களின் காட்சியகம்
வைத்துத் தந்தேன்.
நீயோ...
ஒரே நாளில்
உடைத்துப் போட்டு
பணிமனை யாக்கினாய்!

நீ எழுதிய
முதல் எழுத்து
வெளவாலாய்த் தொங்கினாலும்-
அது என்
ஆத்ம உயிர்ப்பின் உயில்!

நீ உண்டமிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!

வளர்ந்தொருநாள்
வாலிபம் என
இளைஞனாவாய்...

இளமை...
இனிய பருவத்தின்
இயற்கையான முறுக்கும்
இயல்பான எழிலும் என
இன்புற்றுத் திறிவாய்...

இருப்பதெல்லாம்
இஷ்ட்டப் படுவாய்
இல்லாததற்கும்
இச்சை கொள்வாய்...

இஸ்லாத்தின்
இனிய வழியில்
இல்லத்தரசி பெறுவாய்...

இல்லாதோருக்கு ஈவாய்
இன்னலுற்றோருக்கு உதவுவாய்
இங்கொன்றும் அங்கொன்றுமென
இருண்டவெளியும் கடப்பாய்...

இத்தனை சிறப்போடும்
இன்னபிற எழிலோடும்
இருக்கும்
இன்னிலையில்...

முதுமை எய்தி...
முழங்கால் வலியோ
மூட்டு வலியோ
மூச்சிறைப்போ
மூத்திர அடைப்போவென
முடியாமல் போய்...

முதுகில் கூனுமாய்
முகம் சுருங்கி-
முன்னுச்சி முதல்
முடி முழுதும்
முல்லையென வெளுத்தும்-

மூலமோ
முடக்கு வாதமோ தாக்கி...
முற்றத்திலோ
மூலையிலோ
முடங்கிப்போகையில்...

முச்சந்தியில் விடாமல்
மூன்று வேளையல்ல
முடிந்தால்
முழு பசிக்குமாக
முக்காலத்திற்குமாய்
மூன்று கவலம் உணவு போதும்
முடிவாக -கண்
மூடி -மண்
மூடும்வரை தருவாயா மகனே?

- sabeer

LABEL:-

Thursday, December 16, 2010

ஒரு இறை தொழு! - சபீர் அஹமது

தேன்துளி Then Thuli 1:34 AM


கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
திரு மறை ஓது
ஒரு இறை தொழு!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனை தொழு!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரிய செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றி பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
கச்சிதமான உடலும்
வகையாய் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு...

புதிய பூவாய் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு...

மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!

காலநேரம் கடக்குமுன்
கவனமாக தொழு!

கடமையுணர்ந்து தொழு!
கண்மனி நபி
கற்பித்தபடி தொழு!

உறுதியாக தொழு
உபரியையும் தொழு!

உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!



- Sabeer Ahamed.


LABEL:-

உமர் தமிழ்